
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் சாக்கடை மூடியை சொகுசு காரில் வந்த இருவர் திருடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கராச்சி மாநகர மேயர் முர்தாசா வஹாப் சித்திக் தனது சமூக வலைதளமான X பக்கத்தில் பகிர்ந்தவுடன், அதை பார்ப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Please take out 49 seconds of ur time and see this video. This is what we are faced with on a daily basis pic.twitter.com/O31kpki744
— Murtaza Wahab Siddiqui (@murtazawahab1) June 3, 2025
வீடியோவில், ஒரு பளபளப்பான கார் சாலையோரத்தில் நிற்க, அதிலிருந்து இரண்டு நபர்கள் இறங்கி, சாக்கடை மூடியை எளிதாக தூக்கி காரில் ஏற்றிவிட்டு, அங்கிருந்து கிளம்புகிறார்கள். இந்த வீடியோவைக் கண்ட பாகிஸ்தானியர்கள், “நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை இதற்குத்தான் சாட்சி” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“முன்பு சைக்கிளில் வந்த திருடர்கள் இப்போது சொகுசு காரில் வருகிறார்கள்” என்றும், “ஏழைகளின் நாடாக இருந்த பாகிஸ்தான், இப்போது சாக்கடை மூடிகளை திருடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது” என்றும் மக்கள் விமர்சனம் தெரிவிக்கிறார்கள். சிலர், “இந்த நாகரிகமான திருடர்கள் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலவே உள்ளனர்” என்றும் நக்கல் செய்துள்ளனர்.
மேயர் முர்தாசா பகிர்ந்த பதிவில், இந்த சம்பவம் போலிஸ் மற்றும் மாநகராட்சி துறைகளின் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது எனவும், இது நகரின் அடிப்படை பாதுகாப்பு வசதிகளுக்கு மாறாக இருப்பது கவலையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமுதாய கட்டமைப்பு சீரழிந்து வரும் சூழலில், இப்படியான சம்பவங்கள் மக்கள் நலனுக்கு எதிரானவை என்றும், பதவியில் உள்ளோர் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.