இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பயம் நிலவுகிறது. இதன் காரணமாக தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை தீப்பிடிக்காமல் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதற்கான சில எளிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாக எலக்ட்ரிக் பைக்குகளில் அதில் இருக்கும் பேட்டரியால் தான் தீ விபத்து ஏற்படும். எலக்ட்ரிக் பைக்குகளில் லித்தியம்-இயோன் பேட்டரிகள் தான் இருக்கும். இந்த பேட்டரிகள் எளிதாக தீப்பிடிக்காது. அதிக வெப்பத்தின் காரணமாக மட்டுமே தீ விபத்து ஏற்படும். இதனால் எலக்ட்ரிக் பைக்களை வெயிலில் நிறுத்துவதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். அதன் பிறகு பைக்குகளை சார்ஜ் போட்டுவிட்டு கவன குறைவாக இருக்கக் கூடாது. சார்ஜ் போட்டுவிட்டு ஜார்ஜ் கம்ப்ளீட் ஆக ஏறும் வரை அருகில் இருக்க வேண்டும். பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு நிறுவனம் எந்த சார்ஜர்களை பரிந்துரைக்கிறதோ அதை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.
உங்கள் விருப்பப்படி தேவையில்லாத சார்ஜர்களை பயன்படுத்தினால் பேட்டரி பாழாகிவிடும். ஒருவேளை பேட்டரி தீப்பிடிக்க தொடங்கினால் முதலில் அதன் நிறம் மாறும். அதன் பிறகு ஒரு வினோதமான புகை வரும். இதைத்தொடர்ந்து தான் தீ விபத்து ஏற்படும். மேலும் எலக்ட்ரிக் பைக்குகளை வாங்கும் போது அங்கீகரிக்கப்பட்ட பைக்குகளை மட்டும் தான் வாங்க வேண்டும். விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக எலக்ட்ரிக் பைக் வாங்கி விடக்கூடாது. தரமான பைக்கா என்பதை சோதித்துப் பார்த்த பிறகே வாங்க வேண்டும்.