கேரளா எர்ணாகுளத்தில் வசித்து வருபவர் சினிமா தயாரிப்பாளர் மார்ட்டின் செபாஸ்டின். மலையாள சினிமாவில் பல்வேறு படங்களை தயாரித்துள்ள மார்ட்டின் செபாஸ்டின் மீது திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், செபாஸ்டின் திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். கடந்த 2000 ஆம் வருடம் இச்சம்பவம் நடந்தது.

அதோடு சினிமாவில் வாய்ப்பு தருவதாக சொல்லி மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு அழைத்து சென்று தன்னை கற்பழித்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து காவல்துறையினர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மார்ட்டின் செபாஸ்டின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மார்ட்டின் செபாஸ்டின் மறுத்தார். அதுமட்டுமின்றி இவ்வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்யாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எர்ணாகுளம் காவல்துறையினர் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. அதன்பின் காவல்துறையினர் மார்ட்டின் செபாஸ்டினிடம் விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்தனர். பாலியல் புகாரில் தாயரிப்பாளர் மார்ட்டின் செபாஸ்டின் கைது செய்யப்பட்டது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.