நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற மாதம் 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். பதான் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னதாக பல சர்ச்சைகளில் சிக்கியது. இதனால் அதுவே அப்படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தது.

இந்த நிலையில் பதான் படம் இந்தியாவில் முதல் 3 நாளில் ரூபாய்.150 கோடியும், உலகம் முழுவதும் ரூ.300 கோடியும் வசூல் வேட்டை நடத்தி இருக்கிறது. 4-வது நாளில் உலகளவில் ரூ.400 கோடி ஈட்டியது. இதன் காரணமாக இதுவரை பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்து இருந்த இயக்குனர் ராஜமவுலியின் பாகுபலி-2 சாதனையை பதான் முறியடித்துள்ளது.

இதுவரையிலும் தெலுங்கில் உருவாகி இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட பாகுபலி-2 படம் ரூ.510.99 கோடி வசூல் சாதனையுடன் முதலிடத்தில் இருந்தது. பதான் திரைப்படம் வசூல் ரூ.511.22 கோடியாக இருப்பதனால் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. அதோடு இந்தி படங்களில் இதுவரை வசூலில் முன்னணியில் இருக்கும் படம் என்ற பெருமையையும் பதான் பெற்றுள்ளது.