
இந்திய தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஜம்மு காஷ்மீரின் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான உமர் அப்துல்லா சந்தித்துள்ளார். இன்று சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் ஜம்மு-காஷ்மீர் குறித்த பல்வேறு தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் காதுவாவில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்றும் வடக்கு காஷ்மீரின் சோப்பூரில் உள்ள சோதனை சாவடியில் லாரி ஒன்று நிற்காமல் சென்றதற்காக ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவை இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து விரிவாக அமிர்சாவுக்கு, முதல் மந்திரி உமர் அப்துல்லா விளக்கியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த சந்திப்பில் துணை ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களான காவல்துறை, பொது ஒழுங்கு, அகில இந்திய சேவைகள் மற்றும் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் போன்ற விஷயங்களில் மாற்றம் செய்வது தொடர்பாகவும் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.