கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொன்மனை பகுதியில் 65 வயதுடைய முதியவர் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது மகளுக்கு 8 வயதில் மகள் இருக்கிறார். அந்த சிறுமி தற்போது மூன்றாவது படிப்பு வருகிறார். இந்நிலையில் அந்த முதியவர் மகளின் வீட்டிற்கு சென்று பேத்தியுடன் கொஞ்சி விளையாடியுள்ளார். பின்னர் இரவு நேரத்தில் சிறுமி தனது தாத்தாவுடன் தனியாக தூங்கியுள்ளார். அப்போது முதியவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனால் சிறுமி அலறி சத்தம் போட்டதால் கண்விழித்த சிறுமியின் தாய் தனது தந்தையை கண்டித்துள்ளார். பின்னர் மகளிடம் விசாரித்த போது தாத்தாவின் வீட்டிற்கு சென்ற போது அவர் அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். மேலும் இதனை யாரிடமும் கூறக்கூடாது என அவர் சிறுமியை மிரட்டி வைத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.