சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டுக்கோட்டையில் லாரி பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி. இவர் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவர்களது 3 வயது குழந்தை பூவரசன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பின் அவர் மாட்டு கொட்டகைக்கு சென்று விளையாடி உள்ளார். அப்போது அவர் அங்கிருந்த குருணை மருந்தை எடுத்து தின்றதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த செல்வமணி அதிர்ச்சியடைந்து தனது குழந்தையை தூக்கிக் கொண்டு வாயை கழுவி விட்டு பின்னர் கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.