
பத்திரப்பதிவு சட்டத்திற்கு மாறாக தற்போது புதிய வரைவு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பத்திரப்பதிவு செய்பவர்களின் அடையாளத்தை சரி பார்க்க ஆதார் எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வரைவு மசோதாவில் ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்கு வருபவரின் விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணை பயன்படுத்தி சரி பார்க்கலாம். ஆதார் எண் இல்லாதவர்கள் மற்றும் ஆதார் எண் பயன்படுத்த விரும்பாதவர்கள் மாற்று வழிமுறைகள் பயன்படுத்தி சரி பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதார் எண் இல்லாததற்காக யாருக்கும் பத்திரப்பதிவு மறுக்கக்கூடாது. தற்போதுள்ள சட்டப்படி ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் புதிய வரைவு மசோதா படி நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மோசடிகளை தவிர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் ஆவணங்களை அளித்தவர்கள் பத்திரத்தை பெறுவதற்கு முன் சார்பதிவாளர் முன்பு நேரில் ஆஜராக வேண்டும். தற்போதைய சட்டப்படி பத்திரத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, விரல் ரேகை ஆகியவை வைக்கப்பட வேண்டும்.
ஆனால் புதிய மசோதாவில் கையெழுத்து மற்றும் வண்ணப் புகைப்படங்கள் அளிக்கலாம் அல்லது டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கலாம் விரல் ரேகையை சாதாரணமாகவோ அல்லது பயோமெட்ரிக் கருவி மூலமாகவோ அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்வதை மறுப்பதற்கான காரணங்களும் புதிய வரவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான நடைமுறையும் கூறப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஸ்கேனர் கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்த புதிய மசோதா அனுமதிக்கிறது.