
விருதுநகர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இட ஒதுக்கீடு மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகளின் கருத்து கேட்பு ஆகிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்றார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, தமிழ் குடிகளின் இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டு ஒரு சாதிக்கு மட்டும் அதிகமாக கொடுக்கப்படுகிறது.
அவர்கள் உள்ஒதுக்கீடு என்ற பெயரில் உள்குத்து செய்கின்றனர். இதை திமுக, அதிமுக சரிசெய்ய போவதில்லை. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற முயன்றால் போராட்டங்கள் நிச்சயம் நடைபெறும். தேசிய அளவில் உருவாக்கப்படும் கல்விக் கொள்கையை வைத்து தான் மாநில அரசின் கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
அதற்கு நேர்மாறாக இருக்கக் கூடாது. ஒரு மொழியை கற்க கூடாது என்று சொல்வதற்கு மாநில அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் எந்தவிதமான கொள்கையும் கிடையாது. ஏழை மக்களின் குழந்தைகளுக்கு முன்மொழி வழங்கப்படக் கூடாது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?.
இந்தியை யாரும் திணிப்பதில்லை, மத்திய அரசின் பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு வரை மட்டுமே இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டில், AI தொழில்நுட்பங்கள் உருவாக்கியுள்ள இன்றைய காலகட்டத்தில், பல மொழிகளை கற்றுக் கொண்டால் தான் வாய்ப்புகளும் கிடைக்கும்.
ஜப்பான், ஜெர்மன், பிரான்ஸ், லத்தின், ரஷ்ய மொழிகளை கற்றுக் கொண்டால் மட்டும் தான் உலகளாவிய வேலைவாய்ப்புகளை நோக்கி மாணவர்கள் நகர முடியும். தேசிய கல்விக் கொள்கை சர்வதேச தரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஏழை குழந்தைகளின் வாழ்க்கையோடு தமிழக அரசு விளையாடக் கூடாது. தேசிய கல்விக் கொள்கையை இந்தியா ஏற்றுக்கொண்டது. இதனை மாநில அரசு ஏற்றுக்கொள்ள என்ன கஷ்டம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.