திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன்வேலி 16-வது குறுக்கு வீதியில் சிவலிங்கம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்காய வியாபாரி. இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கம் அடிக்கடி தனது மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார். நேற்று காலை கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து தனலட்சுமி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். உடனடியாக உறவினர்களான செந்தில் குமார், ஆறுமுகம், அவரது மனைவி சுமதி ஆகியோர் சிவலிங்கத்தின் வீட்டிற்கு சென்று அவரை கண்டித்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த தனலட்சுமி தனது உறவினர்களுடன் இணைந்து கணவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக தெரிகிறது.

பின்னர் உடலை மறைக்க திட்டமிட்டு நவலூர் குட்டப்பட்டு பாலத்துக்கு அடியில் சிவலிங்கத்தின் உடலை வீசி எரித்து விடலாம் என திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி சிவலிங்கத்தின் உடலை காரில் ஏற்றிக்கொண்டு மாலை 4 மணிக்கு நவலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதேசமயம் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்ட ராம்ஜி நகர் காவல் நிலைய முதல்நிலை போலீஸ்காரர் விஜயகுமார் காரை நிறுத்த முயன்றார்.

இதனை பார்த்ததும் செந்தில்குமார் தப்பி ஓடினார். இதனை தொடர்ந்து விஜயகுமார் சோதனை செய்ததில் சாக்கு மூட்டையில் சிவலிங்கத்தின் உடல் இருந்ததை கண்டு உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தனலட்சுமி, ஆறுமுகம், சுமதி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய செந்தில்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.