உத்தரப்பிரதேசத்தின் பஹ்ராயச் மாவட்டம், பயாக்பூர் தேசிலில் செயல்பட்டு வந்த அனுமதியில்லாத மதரஸா ஒன்றில், 7 முதல் 14 வயதுக்குட்பட்ட 40 சிறுமிகள் கழிப்பறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகர சம்பவம் வெளியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தினர் வியாழக்கிழமை மாலை நடத்திய திடீர் ஆய்வின்போது, 3 மாடி கட்டடத்தின் மேல் மாடியில் கழிப்பறையில் பூட்டி வைக்கப்பட்ட நிலையில் சிறுமிகள் உள்ளதை கண்டுபிடித்தனர்.

இந்த ரெய்டை, பயாக்பூர் துணைத் தாசில்தார் அஷ்வனி பாண்டே தலைமையில் போலீசாரும், மகளிர் காவலர்களும் இணைந்து நடத்தியுள்ளனர். மதரஸா இயக்குநர் கலீல் அகமது குழுவினரை உட்புக விடாமல் முயன்றும், அதிகாரிகள் கட்டாயமாக உள்ளே சென்று சிறுமிகளை மீட்டனர்.

அதிகாரிகள் கூறுகையில், இம்மதரஸா எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லாமல் இயங்கிக்கொண்டு இருந்தது. சிறுமிகள் அங்கு மதரஸா பயிற்சி கொள்பவர்களா அல்லது வேறு காரணங்களுக்காக வைக்கப்பட்டிருந்தார்களா? என்பது தெளிவாக தெரியவில்லை என கூறியுள்ள அஷ்வனி பாண்டே, முழுமையான போலீஸ் விசாரணைக்கு பிறகே உண்மை வெளிவரும் எனவும் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சிறுமிகள் தற்காலிகமாக பாதுகாப்பாக வைத்தபின், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நல அலுவலர் மொஹம்மத் காலித் தெரிவித்ததாவது, பஹ்ராயச் மாவட்டத்தில் தற்போது 495 அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் இயங்கி வருவதாகவும், இச்சம்பவம் குறித்து மாநில அரசுக்கு விரிவான அறிக்கையொன்று அனுப்பப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியருக்கு விரிவான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.