மாரி செல்வராஜ் டைரக்டில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் மாமன்னன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்துக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என ஒஎஸ்டி ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராம சரவணன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது, கே.எஸ்.அதியமான் டைரக்டில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத் , யோகிபாபு நடிக்க ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. சென்ற 2018-ம் வருடம் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கி 80% படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இன்னும் 20% படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் திரைப்படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் நடித்திருக்கும் உதயநிதி அந்த படமே தன் கடைசி படம் எனவும் கூறியுள்ளார்.

ஒப்பந்தப்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் புறக்கணித்து வருவதால் ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தரவேண்டும். மேலும் ரூ.25 கோடியை இழப்பீடாக வழங்கவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மாமன்னன் படத்துக்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றமானது தெரிவித்துள்ளது