லாரி டிரைவராகப் பணியாற்றுவது அத்தனை எளிதான காரியம் அல்ல; பல நாட்கள் குடும்பத்தையும், செல்லப் பிராணிகளையும் பிரிந்து நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு லாரி டிரைவர் தனது செல்ல நாய்களைப் பிரிய மனமில்லாமல் ஒரு சூப்பர் ஐடியாவைச் செய்துள்ளார்.

தனது லாரியின் அடிப்பகுதியில் அந்த நாய்கள் பாதுகாப்பாக அமர்ந்து வருவதற்கு வசதியாக, காற்றோட்டமான மற்றும் பாதுகாப்பான இரண்டு கூண்டுகளை (Cages) பிரத்யேகமாக உருவாக்கியுள்ளார். எங்கு சென்றாலும் தனது செல்லப் பிராணிகளைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் அவரது இந்த மனிதாபிமானம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த 18 வினாடி வீடியோ, இதுவரை 86 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நாய் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி லாரியில் பயணிப்பதைக் காண முடிகிறது.

“சில டிரைவர்கள் சரக்குகளை ஏற்றிச் செல்வார்கள், ஆனால் இவர் அன்பைச் சுமந்து செல்கிறார்” என நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். செல்லப் பிராணிகள் மீது அந்த டிரைவர் காட்டும் அதீத பாசமும், அவற்றுக்காக அவர் செய்த அந்தப் பிரத்யேக வசதியும் “விலங்குகள் மீதான உண்மையான நேசம் இதுதான்” எனப் பலரையும் பாராட்டு மழையில் நனைய வைத்துள்ளது.