
பெங்களூருவில் ஐடி துறையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், கர்நாடக அரசின் வேலை நேர நீட்டிப்பு திட்டத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃப்ரீடம் பார்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது 12 மணி நேரமாக இருக்கும் வேலை நேரத்தை, 14 மணி நேரமாக உயர்த்தும் முயற்சி தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கும் என அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதோடு வேலை நேர அதிகரிப்பு, மன அழுத்தம், உடல்நல பிரச்சினைகள், குடும்ப வாழ்க்கைக்கு பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்பதால், ஊழியர்கள் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஏற்கனவே, பெரும்பாலான ஐடி நிறுவனங்களில் 12-16 மணி நேரம் வரை வேலை செய்ய ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கூடுதல் வேலை நேரத்திற்காக ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால் மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் சோர்வு, முதுகு வலி, கண் பிரச்சினைகள் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், வேலை நேர நீட்டிப்பு பெண்கள் தொழிலில் நீடிக்க இயலாத சூழலை உருவாக்கும் என்பதால், பெண்கள் தொழிலிலிருந்து விலக நேரிடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து வேலை நேர நீட்டிப்பு குறித்து தொழிலாளர் சங்கங்கள் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. கர்நாடக அரசு இது தொடர்பாக மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு உள்ளது என்ற தகவல்கள் வந்துள்ளன. மேலும் வேலை நேர அதிகரிப்பு ஊழியர்களின் வாழ்க்கையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அரசு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்வை எடுக்க வேண்டும் என்று போராட்டக் குழுக்கள் வலியுறுத்துகின்றன. .