கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ (53) என்பவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் 9 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார். இவர் லிபரல் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். கனடா பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்துள்ளது. நாட்டின் பொருளாதார சூழ்நிலை, சொந்த கட்சிகளில் கடும் எதிர்ப்பு, மக்களிடம் ஆதரவு குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோன்று லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து நாட்டின் அடுத்த பிரதமர் அறிவிக்கும் வரை இடைக்கால பிரதமராக தொடர்ந்து செயல்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வருகிற மார்ச் 9ம் தேதி நடைபெறும் என்று லிபரல் கட்சி முடிவு செய்துள்ளது. இதில் அதிக வாக்குகளை பெறுபவர்களே அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் அவரே பிரதமராக பதவி ஏற்பார். இதற்கிடையில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக லிபரல் கட்சி எம்பி சந்திரா ஆர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவர் கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர் தற்போது கனடாவின் ஒட்டாவா மாகாண எம் பி ஆக இருந்து வருகிறார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, கனடா தனது தலைவிதியை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது. கனடாவை ஒரு இறையாண்மை கொண்ட குடியரசாக மாற்ற விரும்புகின்றேன். இதை சாத்தியப்படுத்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் இல்லாமல் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரி சபையுடன் ஒரு சிறிய மற்றும் திறமையான அரசாங்கத்தை வழிநடத்த விரும்புகின்றேன் என்று அவர் பதிவிட்டு இருந்தார்.