அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள கட்லின்ஸ்பர்க் நகரில் நடந்த அதிர்ச்சியூட்டும் காட்டுயிர் சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பரபரப்பான சாலையைக் கடந்து சென்ற ஒரு பெரிய கருப்பு கரடியைப் பார்த்து வாகன ஓட்டிகள் திகைத்து நிற்க, அப்போது அங்கு வந்த ஒரு நபர், கரடியின் பின்னால் சென்று அதைத் தொட முயன்றார்.
View this post on Instagram
இதனால் ஆத்திரமடைந்த கரடி, திடீரென அவரை நோக்கி சீற்றத்துடன் பாய்ந்தது. நல்லவேளையாக, அந்தக் கரடி முழுமையாகத் தாக்கவில்லை, அந்த நபரும் சரியான நேரத்தில் பின்வாங்கிச் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து காணொளியைப் பார்த்த பலரும், அந்த நபரின் பொறுப்பற்ற நடத்தையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஒரு முகநூல் பயனர், “இந்த மனிதன் ஒரு முட்டாள் என்பதற்கு இதுவே உதாரணம். இவரால் அந்தக் கரடி கொல்லப்படவும் வாய்ப்பு இருக்கிறது. கரடிகளை அதன் போக்கில் விட்டுவிடுங்கள். கரடியின் காதில் ஏற்கனவே இரண்டு அடையாளங்கள் உள்ளன. அது செத்ததற்குச் சமம்,” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
காட்டு விலங்குகளைத் தொந்தரவு செய்வது, குறிப்பாக கருப்பு கரடிகள் போன்ற வேட்டையாடும் விலங்குகளை சீண்டுவது கணிக்க முடியாத எதிர்வினைகளைத் தூண்டும் என்றும், பின்னர் அந்த விலங்கு அச்சுறுத்தலாக மாறினால் கருணைக் கொலை செய்யப்படலாம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
