டி20 உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

8வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 10ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 2பிரிவுகளாக 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 5 அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் 4வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி இந்திய நேரப்படி மாலை 6:30 மணிமுதல்  கேப்டவுனில் மோதியது. இதில் இந்திய தொடக்க வீரரும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா, பயிற்சி ஆட்டத்தின் போது இடது விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் போட்டியிலிருந்து விலகினார்.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் துவக்க வீராங்கனைகளான முனீபா அலி (12) மற்றும் ஜவேரியா கான்(8) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  தொடர்ந்து வந்த நிடா தார் டக் அவுட் மற்றும்  சித்ரா அமின் 11 ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். பாகிஸ்தான அணி 12.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

 

அதன்பின் கேப்டன் பிஸ்மா மரூஃப் மற்றும் ஆயிஷா நசீம் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில்  ஆயிஷா அதிரடி காட்டினார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிவந்த பிஸ்மா அரைசதம் கடந்தார்..  இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. பிஸ்மா 55 பந்துகளில் (7 பவுண்டரி) 68 ரன்களும், ஆயிஷா 25 பந்துகளில் (2 பவுண்டரி, 2 சிக்ஸ்) 43 ரன்களும் எடுத்து களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர்.. இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் ராதா யாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா மற்றும் பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் இந்திய அணியின் துவக்க வீரர்களாக யாஸ்திகா பாட்டியா மற்றும் ஷஃபாலி வர்மா இருவரும் களமிறங்கி ஓரளவிற்கு நல்ல துவக்கம் கொடுத்தனர். அதன்பின்  பாட்டியா பவர்பிளேயின் கடைசி ஓவரில்  17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து சபாலி வர்மா உடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் கைகோர்த்தார். இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குப் பிடித்த நிலையில், சிறப்பாக ஆடிவந்த சவாலி வர்மா 33 ரன்களில் 10வது ஓவரில் அவுட் ஆனார். இதனையடுத்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியும் சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் ஹர்மன்ப்ரீத் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.இந்திய அணி 13.3 ஓவரில் 93 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்திருந்தது.

இதையடுத்து ஜெமிமா மற்றும் ரிச்சா கோஷ் இருவரும் கைகோர்த்தனர். இந்த ஜோடி சிறப்பாக ஆடியது. கடைசி 4 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டன. இதில் 17வது ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. பின் கடைசி 3 ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டது.அய்மென் அன்வர் வீசிய அந்த ஓவரில் ரிச்சா கோஷ் 2, 3 மற்றும் 4 ஆகிய பந்துகளில் தொடர்ந்து 3 பவுண்டரி அடித்து மிரட்டினார். பின் கடைசி இரண்டு ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. பாத்திமா சனா வீசிய அந்த ஓவரில் இந்திய அணி 3 பவுண்டரி உட்பட 14 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வென்றது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 38 பந்துகளில் 53 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.