போலந்து நாட்டில் வசிக்கும் ஓர் இந்தியப் பெண்மணி, ஒருவரை பலமுறை முத்தமிட முயன்ற காணொளி வைரலாகப் பரவி, கலாசாரப் பழக்கவழக்கங்கள், தனிப்பட்ட எல்லைகள் மற்றும் சட்டரீதியான விளைவுகள் குறித்துப் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மலையாளப் பெண் என்று கூறப்படும் அவர், சிறுவன் விலகிச் சென்ற போதும் மீண்டும் மீண்டும் அவரது கன்னத்தில் முத்தமிட முயன்றது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் அப்பெண் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து வழக்குத் தொடர்ந்துள்ளதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் வழக்கமாகப் பார்க்கப்படும் தாய்மைப் பாசத்தின் வெளிப்பாடா அவரது செயல் அல்லது அது ஒரு சட்டவிரோதச் செயலா என்ற கேள்வியை இது சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளது.

இந்த வீடியோவுக்குச் சமூக வலைதளங்களில் பலரும் கடுமையான எதிர்வினைகளை அளித்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும், “அந்த நாட்டில் உள்ள சட்டங்களே அங்குச் செல்லுபடியாகும். இதை ஏன் புரிந்துகொள்ள இவ்வளவு கடினம்?” என்று கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும், இந்தியாவில் சிறு குழந்தைகளுக்கு முத்தமிடுவது சாதாரணமாகப் பார்க்கப்பட்டாலும், அது மற்ற நாடுகளில் சட்டரீதியாக வேறுவிதமாகப் பார்க்கப்படும் என்றும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சில பயனர்கள், “இங்கு எந்தவிதமான காம நோக்கமும் இல்லை; இது தூய்மையான அன்பு மட்டுமே. என் பாட்டி கூட என்னைக் கண்டால் கண்கலங்கி முத்தமிடுவார்” என்று பெண்ணுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். எது எப்படியிருப்பினும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாட்டின் சட்டங்களையும், கலாசார எல்லைகளையும் மதித்து நடக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது.

மேலும், 2025ஆம் ஆண்டில் மட்டும், அமெரிக்காவில் சாய் குமார் குர்ரேமுலா மற்றும் இங்கிலாந்தில் வருஜ் படேல், கிஷன் படேல் சகோதரர்கள் உட்படப் பல இந்தியர்கள் மீது வெளிநாடுகளில் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, நீண்ட காலச் சிறைத் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.