டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டின் முதல் குடிமகன் என்ற உரிமையில் ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தது. ஆனால் எதிர்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாததால் 19 எதிர்கட்சிகள் நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, சிவசேனாவில் உத்தவ் தாக்கரே அணி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 19 எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ளது. மேலும் இது குறித்து எதிர்கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தின் அங்கமாக இருக்கக்கூடிய குடியரசு தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அழைக்காதது ஜனநாயகத்திற்கு எதிரானது. மேலும் அவரே  இந்த விழாவிற்கு தலைமை தாங்கி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.