
பஞ்சாப் மாநிலத்தில் மோகா நகரில், திருமணத்தின் பெயரில் நடைபெற்ற மோசடி சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. அமிர்தசரஸிலிருந்து 40-45 விருந்தினர்களுடன் திருமண ஊர்வலத்தில் வந்த மணமகனும், அவரது குடும்பமும் திருமணம் நடைபெறவிருந்த இடத்தை அடைந்த போது, அந்த முகவரியில் எந்த ஏற்பாடுகளும் இல்லை.
மேலும் அந்தப் பகுதியில் புகைப்படத்தில் உள்ள பெண்ணை யாரும் அடையாளம் காண முடியவில்லை என்பதும் தெரியவந்தது. அதேபோல், மணமகளின் பெயரில் எந்த வீடும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இது முழுமையாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மோசடி என உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
மணமகனின் உறவினர்கள் இந்த உறவை ஏற்பாடு செய்ததாகவும், ஆணும் பெண்ணும் வீடியோ அழைப்புகள் மூலம் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. பெண், “நான் இங்கிலாந்தில் இருந்து வருகிறேன்” என்றும், திருமண ஏற்பாடுகளைத் தானே செய்வதாகவும் கூறியிருந்துள்ளார். திருமணம் நடைபெறவிருந்த ‘ராயல் பேலஸ்’ கூட, எந்த முன்பதிவும் இல்லை என அறிவித்தது, இது இந்த மோசடியை உறுதி செய்தது.
மணமகனின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து, இந்த மோசடி சம்பவத்தை முழுமையாக விசாரிக்கக் கோரியுள்ளனர். இதுபோன்ற சம்பவம் மோகா பகுதியில் இதற்கு முன்பும் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பொது மக்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ள நிலையில், பொது இணைய தொடர்புகளிலும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.