
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் உள்ள நியூவர்க் சர்வதேச விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் கைதியைப் போல நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த ஜூன் 8ஆம் தேதி அன்று குனால் ஜெயின் என்ற இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க தொழில் அதிபர் ஒருவர், விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் கையில் கைவிலங்கு பூட்டப்பட்டு தரையோடு தரையாக அமுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த இந்திய மாணவர் கண்ணீர் விட்டு அழுத போதும் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துச் செல்லப்பட்டு நாடு கடத்தப்பட்ட சம்பவம் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சமூக வலைதள பயனர்கள் பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இச்சம்பவத்திற்கு உடனடியாக இந்திய அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை தங்களது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, அமெரிக்கா தங்களது நாட்டிற்கு சட்டபூர்வமான பயணிகளை தொடர்ந்து வரவேற்கிறது.
ஆனால் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது சகித்துக் கொள்ளவும் மாட்டோம் என பதிவிட்டுள்ளது. அமெரிக்காவில் இந்திய மாணவர் துன்புறுத்தப்படும் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக சட்டவிரோத குடியேறிகள் எனக்கூறி நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கை மற்றும் கால்களில் விலங்கிட்டு வலுக்கட்டாயமாக அமெரிக்காவை விட்டு நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.