
உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில், ஆடம்பரமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பெண்கள் லோலா கயுமோவா என்ற 49 வயது பெண் மூலம் லக்னோவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்ற மோசடி மூலம் இந்தியாவுக்கு கடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
விசாரணையில், லோலா கயுமோவா தனது வயதையும் அடையாளத்தையும் மறைக்க ஏழு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் செய்திருந்தார். 49 வயதில் இருப்பதுபோல் தெரியாமல், தன்னை 29 வயது இளம்பெண் போல காட்ட லோலா முகம், உதடுகள், அக்குள், அந்தரங்க பகுதிகளிலும் அறுவை சிகிச்சை செய்திருந்தார். இந்த அறுவை சிகிச்சைகளை லக்னோவைச் சேர்ந்த அழகுசாதன அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
போலீசார் சோதனை நடத்தியபோது ஹோலிடா, நிலோஃபர் என இரண்டு பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த பெண்கள் போலீசாரிடம், தங்களை இந்தியாவுக்கு அழைத்து வந்ததும், வாடிக்கையாளர்களுக்கு நேரில் அழைத்துச் செல்வதும், தங்குமிடம் ஏற்பாடு செய்ததும், கூடவே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கும் லோலா தான் முழுமையாக பொறுப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் லோலா, ட்ரிஜின் ராஜ் என்கிற அர்ஜுன் ராணா மற்றும் அந்த அழகுசாதன நிபுணர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். லோலா சட்டவிரோதமாக இந்தியாவில் பல ஆண்டுகளாக தங்கி இருந்தபோதும், ஒரு என்.ஆர்.ஐ என தன்னை சித்தரித்து, போலி ஆவணங்களுடன் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுள்ளார்.
அவரது ஓட்டுநர் உரிமம் 2035 வரை செல்லுபடியாகும் எனவும், இதைச் சரிபார்க்காமல் மருத்துவ சேவைகள் வழங்கிய மருத்துவ நிபுணருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் வெளிநாட்டவர் பதிவு அலுவலகம் (FRRO) மூலம் லோலாவின் பயண வரலாறு மற்றும் சட்டவிரோத தங்குதல் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.