ராஜஸ்தானின் பிரபல மலைப்பகுதியான மவுண்ட் அபுவில், சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. துந்தாய் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலின் வரவேற்பறையில், புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ஒரு கரடி நுழைந்து சுமார் 5 நிமிடங்கள் உலா வந்தது.

அந்த நேரத்தில் வரவேற்பறையில் யாரும் இல்லாததால், அது தன்னிச்சையாக சுற்றி உணவு தேடியது. ஆனால் எதுவும் கிடைக்காததால், பிறகு அமைதியாக வெளியே சென்று விட்டது. இந்த சம்பவத்தின் முழுக்காட்சியும் சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரடி ஹோட்டலில் நுழைந்ததற்கான முக்கிய காரணமாக, வரவேற்பறையின் கதவு உள்ளே இருந்து பூட்டப்படாதது என்பதே கூறப்படுகிறது. கரடி கதவை தள்ளி திறந்து நுழைந்தது.

அது வரவேற்பு மேசை, சோபா மற்றும் அறை மூலைகளில் உணவுக்காக தேடி பார்த்தது. எந்தவிதமான சேதமும் ஏற்படாமல் அந்த கரடி வெளியே சென்றது என்பதையும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிசிடிவி வீடியோவில், அந்த கரடியின் நகர்வுகள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மவுண்ட் அபுவில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், அனதாரா பாயிண்ட் அருகே ஒரு பெண் கரடி தனது குட்டிகளுடன் சுற்றி திரிந்தது. அதையும் சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்தனர்.

அதேபோல், மவுண்ட் அபுவின் காட்டுப்பகுதியில் ஒரு சிறுத்தைப் புலியும் காணப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. வனவிலங்குகளின் இந்த அசாதாரண நடமாட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.