தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சுடர் வடிவேலு (57) – தவமாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சுடர் வடிவேலுவுக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சுண்டங்குறிச்சி ஆகும். தற்போது இவர் தனது மனைவியின் ஊரான ஊத்துமலையில் வசித்து வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சுடர் வடிவேலு ஊத்துமலை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பூக்கடை நடத்தி வந்துள்ளார்.

அவரது கடைக்கு எதிரே கார்த்திக் (35) என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சுடர் வடிவேலு தனது பூக்கடையை விரிவாக்கம் செய்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்திக், “சாலையை ஆக்கிரமித்து கடையை அமைத்துள்ளார்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்கு இடையேயான தகராறு முற்றிய நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக கார்த்திக், சுடர் வடிவேலு ஆகியோருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறில் கோபமடைந்த கார்த்திக், சுடர் வடிவேலுவை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று முன்தினம், சுடர் வடிவேலுவின் மனைவி தனது மகளுக்கு பாம்பு கடித்த காரணத்தினால் மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் சுடர் வடிவேலு வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அதனை அறிந்த கார்த்திக் தனது கூட்டாளிகளுடன் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது கார்த்திக் அவரது கூட்டாளிகளுடன் சுடர் வடிவேலுவை கொலை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் ஆன கணேசன் (30) அருள் பாண்டியன், உதயகுமார், மணிவண்ணன் (28) ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்களிடம் இருந்த அரிவாள், கத்தி, கார் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.