இந்தியத் திரையுலகின் இசை ஜாம்பவான் ஆஷா போஸ்லே ( 92) உடல்நலக் குறைவால் காலமான செய்தி ஒட்டுமொத்த தேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் நேரில் சென்றார்.

ஆஷா போஸ்லேயின் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தபோது, சச்சின் தனது துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்தன. சச்சின் டெண்டுல்கருக்கு ஆஷா போஸ்லே மீது எப்போதுமே ஒரு தனி மரியாதையும், அன்பும் உண்டு.

 

அவரது பாடல்களைக் கேட்டு வளர்ந்ததாக சச்சின் பலமுறை பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார். சமூக வலைத்தளமான ‘X’-ல் சச்சின் பதிவிட்டுள்ள உருக்கமான பதிவில், “எங்களுக்கு ஆஷா தாய் ஒரு குடும்ப உறுப்பினர் போல. இன்று எங்களின் இழப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

அவர் நமக்குப் பரிசளித்த எண்ணற்ற மெல்லிசைகள் என்றும் நம்முடன் இருக்கும். காலமே உறைந்து போனது போல உணர்கிறேன். உங்களை மிகவும் மிஸ் செய்வோம் ஆஷா தாய்” என பதிவிட்டுள்ளார். கடந்த மாதம் ஜாம்நகரில் நடைபெற்ற அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணத்தில்தான் ஆஷா போஸ்லே கடைசியாகப் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இசை சகாப்தம் முடிவுக்கு வந்தாலும், அவரது குரல் என்றும் நம் இதயங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.