மலையாள படங்களில் நடித்து வருபவர் நடிகர் சித்திக். இவர் மேலும் திரைப்படத் தயாரிப்பாளராகவும், மலையாள திரைப்பட சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 2024 ல் வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை அடுத்து, நடிகை ரேவதி சம்பத் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார் என புகார் அளித்தார்.

கடந்த 2016 இல் படப்பிடிப்பு வேலைக்காக இருவரும் திருவனந்தபுரம் ஸ்டார் ஹோட்டலில் தங்கிருந்தபோது நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் கேரள காவல்துறையினர் நடிகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் விசாரணையில் நடிகரும், நடிகையும் ஒரே ஓட்டலில் தங்கியதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இச்செய்தி மலையாளத் திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஆகஸ்ட் 25 2024ல் நடிகர் சித்திக் மலையாளத் திரைப்பட சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகினார். இந்த நிலையில் தற்போது நடிகர் சித்திக் தன்மீது ஆதாரமற்ற புகார்களை அளித்துள்ளனர் என்றும் தனக்கு முன் ஜாமின் வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்.

தற்போது இந்த வழக்கு கேரளா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த முன்ஜாமினை கேரள நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடிகர் சித்திக்கின் முன் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால்.அவர் வேறு எங்கும் வெளிநாட்டுப் பயணம் செல்ல முடியாதபடி காவல்துறையினர் அவருக்கு எல்.ஓ.சி அளித்துள்ளனர்.