
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10-ம் தேதி தொடங்கி 17ம் தேதி நிறைவடைந்தது. இதில் 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேப்பமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் 4 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி 3 மனக்களும் தாக்கல் செய்தனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி வேட்பு மனு தாக்கல் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் 55 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் என்பதால், சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் வெளியிட்டார். அதன்படி 46 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளராக உள்ளவர்கள் மாநிலத்தின் வேறு பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கும் விடுமுறை பொருந்தும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணை இன்று அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி அன்று நடைபெறும்.