கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. இந்தத் தொகுதியின் வேட்பு மனு ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 7ஆம் தேதி நிறைவு பெற்றது. சுயேச்சை உள்ளிட்ட வேட்பாளர்கள் சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு பணியில் 1206 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவை மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் 9 மணி வரை 22,973 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால், மக்கள் அதற்கு முன் வந்து வாக்களிக்கும்படியும், நேரம் தவறினால் அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.