மும்முட்டி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்னதாக வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் விமர்சனம் ரீதியாக பாராட்டப்பட்டது. இந்நிலையில் அவர் நடித்துள்ள அதிரடி ஆக்சன் திரைப்படமான கிறிஸ்டோபர் என்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நாயகிகளாக சினேகா, ஐஸ்வர்ய லட்சுமி, அமலாபால் நடித்து உள்ளனர். பிரபல டைரக்டர் பி.உன்னிகிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மம்முட்டியும் நாயகிகளில் ஒருவரான ஐஸ்வர்ய லட்சுமியும் இணைந்து கலந்துகொண்டனர். அப்போது ஐஸ்வர்ய லட்சுமியிடம் மம்முட்டி குறித்து கேட்கப்பட்டபோது, அவர் சர்க்கரை போன்றவர் என புகழ்ந்து கூறினார். உடனே மம்முட்டி அவரை கேலி செய்யும் வகையில் சர்க்கரை என்று கூறவேண்டாம் பஞ்சசாரம் (சீனி) என்று வேண்டுமானால் சொல்லுங்கள் என்று சொன்னார்.

அதோடு சர்க்கரை எனில் கருத்த நிறத்தில் உள்ள கருப்பட்டியைதான் குறிக்கிறது. இதே நான் உங்களை பற்றி சொல்லும்போது சர்க்கரை என்று கூறினால் நன்றாக இருக்குமா என கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தார் ஐஸ்வர்ய லட்சுமி. இதுகுறித்த வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் இன்னமும் கூட மம்முட்டி நிற பேதம் பார்க்கிறாரா என்று கூறி அவரது பேச்சுக்கு தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.