பிரேசிலின் ஜுவாஸீரோ டோ நோர்டே நகரில் உள்ள ஒரு கால்நடை மருத்துவமனைக்கு, காயம் அடைந்த தெரு நாய் ஒன்று நொண்டியபடி தானாகவே உள்ளே நுழைந்தது. அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் அந்த நாயைப் பார்த்ததும் அதிர்ந்து போயினர்.
யாரோ அழைத்து வராமலேயே, தனக்குச் சிகிச்சை தேவை என்பதை உணர்ந்து அந்த நாய் அங்கு வந்து நின்றது. மருத்துவமனை ஊழியர்கள் அந்த நாயை நெருங்கிய போது, அது பயந்து ஓடாமல் மிகவும் அமைதியாகத் தனது காயம்பட்ட காலைத் தூக்கிக் காட்டியது. அந்த நாயின் காலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அதன் காலில் புற்றுநோய் கட்டி (Tumor) இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
நாயின் நிலையைக் கண்டு உருகிய மருத்துவமனை ஊழியர்கள், அதற்கு உடனடியாக கீமோதெரபி (Chemotherapy) சிகிச்சையைத் தொடங்கினர்.
View this post on Instagram
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான இதயங்களை வென்றுள்ளது. “மனிதர்களை விட விலங்குகள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை” என்றும், “அந்த நாய்க்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தேவதைகள்” என்றும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
தற்போது அந்த நாய் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பதாகவும், குணமடைந்த பிறகு ஒரு நல்ல குடும்பத்திடம் அதனைத் தத்து கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
