கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெடுமானூர் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 450 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாணவ- மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பிறகு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை எடுக்க சென்றனர். அப்போது நெடுமானூர் மற்றும் சேஷசமுத்திரம் ஆகிய இரு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் சைக்கிளை ஒருவருக்கொருவர் மாற்றி எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்பு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பு மாணவர்களையும் சமாதானப்படுத்தினர். பின்னர் பள்ளிக்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மாணவர்களை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளார். இருதரப்பு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.