தமிழகத்தில் கள ஆய்வின் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார். அந்த மாவட்டங்களில் நடக்கும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்துவிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்தார்.

இந்நிலையில் வருகின்ற மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் தென் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இந்த இரண்டு நாட்களில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி மண்டலங்களுக்கான கள ஆய்வு நடைபெற உள்ளது. இதில் ஆய்வு செய்ய உள்ள மாவட்டங்களில் தமிழக அரசின் திட்டங்கள் அந்தந்த மாவட்டங்களில் எந்த அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான உத்தரவுகளை பிறப்பிப்பார் எனவும் கூறப்படுகிறது.