பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் விடுதுள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நடிகர் மயில்சாமி மறைந்தார் என்ற துயரமுற்ற செய்தி அறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்த அவர் தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர்.

அதனைத் தொடர்ந்து காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலமாக தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகின்ற அளவுக்கு அன்பை பெற்றுள்ளார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தன்னுடைய கருத்துக்களை ஆழமாக பதிவு செய்யக்கூடியவர். மேலும் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது தான். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலக கலைஞர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதல்களையும் கூறிக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.