
சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் ஒரு வீடியோவில், சாலைக்கான ஒப்பந்தம் பெற்ற ஒரு ரோடு காண்டிராக்டர், சாட்ஜிபிடி-யை பயன்படுத்தி புதிதாக சாலை போடப்பட்டதாக போலி புகைப்படம் உருவாக்கியிருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடியோவில், ஒரு பழைய, சீரமைக்கப்படாத கிராமப்புற சாலையின் புகைப்படம் எடுக்கப்படுகின்றது.
View this post on Instagram
பின்னர், சாட்ஜிபிடி-க்கு “இந்த சாலையை புதியதாக மாற்றி காட்டவும்” என்ற புகைப்பட திருத்தப் ப்ராம்ப்ட் கொடுக்கப்பட, அது மிகத் தத்ரூபமாக புதிய கான்கிரீட் சாலையாக மாற்றி புகைப்படத்தை வழங்குகிறது. அந்த புகைப்படத்தை, அந்த காண்டிராக்டர் தனது பொறியாளருக்கு அனுப்புகிறார். புகைப்படத்தை பார்த்த பொறியாளர், நிஜமாகவே சாலை போடப்பட்டதுபோல என்று நம்பி, ‘தம்ஸ்அப்’ காட்டி ஒப்புதல் வழங்குகிறார்.
இதன் மூலம் சாலை போடாமல், பணத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. இதனையடுத்து, வீடியோ உண்மையானதா அல்லது யாரோ கற்பனைக்காக உருவாக்கிய காட்சியா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.
இந்த வீடியோவை ‘naughtyworld’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ளது. மில்லியனுக்கு மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
சாட்ஜிபிடி போன்ற ஏஐ தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்தினால், அதனால் ஏற்படக்கூடிய மோசடிகள் பற்றிய அச்சம் தற்போது சமூகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. இது போன்ற சம்பவங்கள், அரசு துறைகளில் ஒழுங்குமுறை கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் மிக அவசியம் என்பதையும் நினைவூட்டுகின்றன.