சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி அருகே கட்டாணிபட்டியை சேர்ந்த சகோதரர்கள் மணிகண்டன் (30), சிவசங்கரன் (25). அதில் மணிகண்டன் கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சிவசங்கரன் கள்ளம்பட்டியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகங்கை அருகே அழகமா நகரில் உள்ள ஒரு நபருக்கு சொந்தமான தோப்பில் மாடு ஒன்று தொலைந்ததாக அப்பகுதியில் உள்ள சிலர் நேற்று நள்ளிரவு தேடிக் கொண்டிருந்தனர்.

அப்போது தோப்பிற்குள், ஆடு, கோழி சத்தம் கேட்பதாக தோப்பிற்குள் அப்பகுதியில் நின்றவர்கள் வந்தபோது மணிகண்டன், சிவசங்கரன், இருவரும் இருந்துள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் நின்ற சிலர் இருவரையும் துரத்தி சென்று மடக்கிப்பிடித்து சராமாரியாக தாக்கியுள்ளனர்.

இருவரும் தப்பியோட முயற்சித்த போதும் அனைவரும் சேர்ந்து தாக்கியதால் சம்பவ இடத்திலேயே இருவரும் மயங்கி கீழே சரிந்தனர். இதனை எடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்த இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் பின் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது உண்மையிலேயே இருவரும் ஆடு,கோழிகளை திருட வந்தனரா?, அல்லது ஏதேனும் முன் விரோதம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து இருவரையும் ஆக்ரோஷமாக தாக்கிய அழகமா நகரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி(45), சேர்மராஜ்(31), பிரபு(30), தீபக்(19), விக்னேஸ்வரன்(31), தினேஷ்(31) ஆகிய 6 பேரை முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில் வினோத்(34), பிரவீத்(24), அருள்பாண்டி(29), யுகராஜ்(24), அரவிந்த்(25), மணிகண்டன்(22), சீமான்(42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதன்பின் அண்ணன், தம்பி இருவரையும் கொலை செய்த வழக்கில் 13 பேர் கைதாகி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இரட்டை சகோதரர்கள் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்கனவே மேலவளவு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.