சேலம் மேற்கு தொகுதியைச் சேர்ந்த பா.ம.க. (பட்டாளி மக்கள் கட்சி) எம்.எல்.ஏ. அருளை கட்சி ஒழுங்குமுறை மீறியதாகக் கூறி கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவிப்பு கட்சியிலிருந்து நீக்கம் சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் திரு. இரா. அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரு. இரா. அருள் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 30&இன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று (02.07.2025) புதன்கிழமை முதல் திரு. இரா. அருள் அவர்கள் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒரு நடுநிலை மற்றும் பிரபல எம்.எல்.ஏ.வாக கருதப்பட்ட அருளை நேரடியாக கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கையால் பா.ம.க.வில் அதிர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. இது கட்சியின் உள்கட்டமைப்பிலும், சேலம் மாவட்ட அரசியலிலும் புதிய பரிணாமங்களை உருவாக்கும் என கூறப்படுகிறது.