அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோபி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியில் இருந்து விலகியவர்களை எம்.ஜி.ஆர் வீட்டிற்கே சென்று நேரடியாக அழைப்பார். அதிமுகவிலிருந்து விலகி சென்றவர்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் கட்சியில் இணைய  தயாராக இருக்கிறார்கள். எனவே இன்னும் பத்து நாட்களுக்குள் அவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவின் ஆளுமையை ஏற்றோம். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலாவை அழைத்தோம். கட்சியின் தலைவராகவும் முதல்வர் வேட்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமியை கை காட்டியதே சசிகலா தான்.

கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்தால் மட்டும் தான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும். இது தொடர்பாக 6 மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்தோம். எடப்பாடி பழனிச்சாமிக்காக பிரச்சாரத்தின் போது வரும் கூட்டம் வேறு தொண்டர்களின் மனநிலை வேறு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு இரண்டு வாய்ப்புகள் வந்தும்  அதிமுக உடைந்து விடக்கூடாது என்பதற்காக அதையெல்லாம் தியாகம் செய்துவிட்டேன்.

மேலும் அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் ஏற்க வேண்டும். அப்படி செய்தால் மட்டும்தான் அவருடைய பரப்புரையில் நான் பங்கேற்பேன் என்று கூறினார். மேலும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.