
18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது.
குஜராத்திலிருந்து பெங்களூருக்கு வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்ட நிலையில் சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து வீரர்கள் பெங்களூரு நகரில் ஊர்வலம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சின்னசாமி மைதானத்திற்கு வந்த கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்களின் கூட்டம் அலை மோதுவதால் பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சின்னசாமி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் நிலையில் வெளியே கூட்ட நெரிசல் அலை மோதுகிறது. முதலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த கூட்டம் நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் இந்த சம்பவத்திற்கு பெங்களூர் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார். முறையாக ஏற்பாடுகள் செய்த போதிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
சுமார் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கூட்ட நெரிசலில் ஏராளமான ரசிகர்கள் சிக்கி உயிரிழந்துள்ளது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.