தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இன்று தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற 18-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில் இன்று திருநெல்வேலியில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது