ஈரோடு மாவட்டத்தில் ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு செலுத்தப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே ஏடிஎம் மெஷின் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஏடிஎம் மிஷினில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக ஒரு நபர் 13,000 ரூபாயை வங்கிக்கணக்கில் இருந்து எடுக்க முயன்றார். அப்போது அவருக்கு வந்த பணத்தில் ரூ. 4,500 மட்டுமே நல்ல நோட்டுகளாக இருந்த நிலையில் ரூ.8,500 நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருந்துள்ளது.

இதனால் அவர் இந்த செய்தியை வங்கியின் மேலாளர் குட்டி கண்ணனுக்கு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஏடிஎம் மிஷினை ஆய்வு செய்த வங்கி மேலாளர் அவரிடம் இருந்த பணத்தை வாங்கி பார்த்த போது கள்ள நோட்டு என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஏடிஎம் மிஷனில் கள்ள நோட்டுகளை யார் செலுத்தியது? எங்கிருந்து செலுத்தப்பட்டது? என்ற வகையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிவகிரி பகுதியில்  எஸ்பிஎஸ் தெருவை சேர்ந்த ராமு என்பவர் கள்ள நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தியதை கண்டுபிடித்தார்.

பின்னர் இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து வங்கி கணக்கில் கள்ளநோட்டுகளை செலுத்திய ராமுவை கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மூங்கில் வியாபாரம் செய்து வருவதாகவும், கடந்த 24ஆம் தேதி பர்கூர் மலைப்பகுதியில் உள்ள முருகன் என்பவரிடம் மூங்கில் வாங்கிக் கொண்டு இந்த 13,000 பணத்தைப் பெற்ற நிலையில் அதனை வங்கி கணக்கில் செலுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இதனால் இவருக்கு பணம் கொடுத்த முருகன் என்பவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானது தெரியவந்தது. மேலும் முருகன் என்பவர் கள்ள நோட்டு கும்பலை சேர்ந்தவரா..?அல்லது தவறுதலாக கொடுத்தாரா..? என்ற நோக்கில் விசாரணை நடத்தப்பட்டு தீவிர தேடுதலில் காவல்துறையினர்  ஈடுபட்டுள்ளனர்.