
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு கிராமப்புற பகுதியில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக ‘அனைவருக்கும் வீடு’ என்ற கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை அடையும் பொருத்து எதிர்வரும் 2030ம் ஆண்டிற்குள் ஊரகப்பகுதிகளில் 6 வருடங்களில் 8 லட்சம் வீடுகள் புதிதாக கட்டித் தர அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி நடப்பாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு, சமையலறை உட்பட 360 சதுர அடி ஆகும். பயனாளிகளின் நிதி சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் TANCEM சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, துறை மூலம் வழங்கப்படுகிறது. இதில் இவர்களுக்கு வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணி முடிவுற்ற பின் என 4 தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் மூலம் தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை தமிழ்நாடு அரசால் ரூ 1625.30 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்கள் தமிழ்நாடு அரசு மேலும் 500 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது. தற்போது வர பெற்றுள்ள ரூ.500 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ2125.30 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தமிழ்நாடு அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.