மகாராஷ்டிராவின் துலே நகரம், தேவ்பூர் பகுதியில், ஒரு ராணுவ வீரர் தனது காதலியுடன் சேர்ந்து தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 10-ம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிவந்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், ராணுவ வீரர் கபில் பாகுல் தனது மனைவி பூஜா பாகுலுக்கு விஷ ஊசி போட்டு, பின்னர் அவரை கொடூரமாக தாக்கி கொன்றது தெரியவந்துள்ளது.

மனைவியின் கைகளிலும் கால்களிலும் கட்டுப்பாடு வைத்து, பூச்சிக்கொல்லி மருந்தை ஊசியாக செலுத்தியதன் விளைவாக, பூஜா வாயிலிருந்து நுரை வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர் வலியால் துடிக்கத் தொடங்கியதும், கணவர் அதை பார்த்துக்கொண்டே இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். உடலை தொடக்கமாக தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் மாவட்ட மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர். பிரேத பரிசோதனையில், அவரது கைகளிலும் வாயிலும் கருப்பு, நீல நிற அடையாளங்கள் உள்ளனவாக தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து, இறந்தவரின் சகோதரர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில், கபில் பாகுல், அவரது தந்தை, தாய், மைத்துனி மற்றும் காதலி பிரக்யா ஆகியோர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலையின் பின்னணியில், 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் கணவர், காதலி இடையேயான தகாத உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதமே காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. கபில் ராணுவத்தில் எழுத்தராக பணியாற்ற, அவரது மனைவி பூஜா ஒரு ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். காதலி பிரக்யாவும், கபிலும் கல்லூரி நாட்களில் காதலித்தவர்கள் என்பதும், சமீபத்தில் மீண்டும் தொடர்பு ஏற்பட்டு லாட்ஜ்களில் சந்தித்து வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.