ராணிப்பேட்டை மாவட்ட  ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதாவது, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தும் வகையில், மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துத்துறைகளின் பணிகளை கலெக்டர் எளிதில் கண்காணிக்கும் பொருட்டு மற்றும்  களப்பணிகளை திடீர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட அளவிலான அலுவலர்கள், துறை அலுவலர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பணியில் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் விடுப்பில் செல்லும் போது கலெக்டரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே செல்ல வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் தலைமை இடத்தை விட்டு வெளியேறுவது தெரியவந்தால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.