
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. முன்னதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் பிஆர்ஓ நடராஜன் என்பவரை தொடர்புப்படுத்தி பேசி இருந்தார்.
இந்நிலையில் தற்போது பல்கலைக்கழகம் முன்னாள் பிஆர்ஓ நடராஜன், அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அண்ணாமலை தன்னுடைய சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் அண்ணாமலைக்கு எதிராக ரூ.50 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார்.