
விஜய் டிவி பிரபலம் நடிகர் பாலா ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். இதன்படி இவர் இலவச ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்றவற்றை வழங்கி அதன் மூலம் தனது சமூக சேவையை செய்து வருகிறார். இது போன்று புதுச்சேரியில் விலங்குகளை பாதுகாக்கும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் அசோக்ராஜ். இவர் “குரலற்றவர்களின் குரல்” என்ற பெயரில் நோயால் பாதிக்கப்பட்ட விபத்துக்குள்ளான விலங்குகளை பராமரித்து வருகிறார். இவரது சேவை குறித்து அறிந்த பாலா இவருக்கு உதவுவதற்காக இவரை கடந்த 2 நாட்களாக போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
நடிகர் பாலா அசோக்ராஜுக்கு போன் செய்து தங்களால் பராமரிக்கப்படும் விலங்குகளை பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து புதுச்சேரிக்கு சென்ற பாலா அசோக் ராஜை சந்தித்துள்ளார். மேலும் அசோக்ராஜிற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். மேலும் இது குறித்து பாலா கூறியதாவது, பாதிக்கப்பட்ட விலங்குகளை காப்பாற்றி நீங்கள் செய்யும் சேவை குறித்து அறிந்தேன். இதனால் பல கஷ்டங்களும், வேதனைகளும் அடைந்துள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையே இதற்காக அர்ப்பணித்த உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது எனக் கூறி ஆம்புலன்ஸை பரிசாக அளித்து பாராட்டினார்.
இந்தப் பரிசை எதிர்பார்க்காத அசோக்ராஜ் திகைப்பில் நின்று கொண்டிருந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் சாவியை பெற்றுக் கொண்ட அவர் கலங்கிய கண்களோடு கூறியதாவது, பல வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், பூனைகளை இருசக்கர வாகனத்தில் மருத்துவ உதவிக்கு எடுத்துச் சென்றதாகவும், புதுச்சேரி மருத்துவமனையில் கைவிடப்பட்ட நாய்களை சென்னைக்கு எடுத்து செல்ல வாடகை வண்டியை பயன்படுத்தியதாகவும் தான் அடைந்த இன்னல்களை கூறினார். தற்போது நடிகர் பாலா மூலமாக தனக்கு மேலும் சேவை செய்யும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் இணையத்தில் வைரலாகி பலரும் நடிகர் பாலாவை ரியல் சூப்பர்ஸ்டார் என பாராட்டி வருகின்றனர்.