தர்மபுரி மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் விமானப்படை விமானம் 2 பறந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது நேற்று காலை 7 மணி அளவில் இந்திய படை விமானங்கள் சுமார் 4 மணி நேரமாக வானில் தாழ்வான பகுதியில் வட்டம் அடித்தது.

அதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அறிந்த தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது, அந்த விமானங்கள் கர்நாடகவில் அமைந்திருக்கும் எலங்கா விமானப்படைத்தளத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

அவை விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக அனுப்பப்பட்டவை. பயிற்சியின் போது பாதுகாப்பு கருதி மற்றொரு விமானத்தை அனுப்பும் வழக்கம் உள்ளதால் 2 விமானங்கள் தர்மபுரி வழியாக பறந்து சென்றதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரே நேரத்தில் 2 விமானப்படை விமானங்கள் தாழ்வான உயரத்தில் பலத்த சத்தத்துடன் பறந்து சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.