
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் கோரேக்காவ் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். அவர் மேற்கு புறநகர் பகுதியில் உள்ள சர்வதேச பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த மே 27 ஆம் தேதி அந்த மாணவி அடுக்குமாடி கட்டிடத்தில் 45 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். அதனால் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இது குறித்த அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மாணவியின் புத்தகப்பையில் கடிதம் ஒன்று சிக்கியது.
அதில் “எனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல. இது நானாக எடுத்த முடிவு” என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவி கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்த பிரச்சனையில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும் அந்த சிகிச்சையின் போது ஒரு முறை மாணவி “எல்லோரும் ஒருநாள் சாக தான் போகிறோம். பிறகு ஏன் உயிர் வாழ வேண்டும்” என மருத்துவரிடம் கேட்டதாக அவரது தந்தை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.