சட்டசபையில் இன்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சுவாமிநாத அய்யர் 3000 மேற்பட்ட ஓலை சுவடிகளை பதிப்பகங்களாக மாற்றியுள்ளார். அவரது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, தமிழ் புலவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி புலவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது. இவரது பிறந்த நாள் பிப்ரவரி 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அந்த நாளை இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு அமைச்சர் மு.பே சாமிநாதன் கூறியதாவது, உ.வே.சுவாமிநாத அய்யருக்கு வருடந்தோறும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதோடு அவரது பிறந்த நாள் அன்று கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. உறுப்பினரின் கோரிக்கை பற்றி முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் கூறியதாவது, சுவாமிநாத அய்யருக்கு தமிழக அரசு உரிய மரியாதை செலுத்து வருகிறது. உறுப்பினரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அவரது பிறந்த நாள் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று கூறினார்.