அதிமுக செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக செய்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்து வருகிறார்; “எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மரபுகளை கடைப்பிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம்; மீனவர் நலனை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்; நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்துக்கு கண்டனம், பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்; ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்தியஅரவை வலியுறுத்தி தீர்மானம்” உள்ளிட்ட 23 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது

அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

தீர்மானம் – 1 :

புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் ஆளுமை திறனோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளராக பொறுப்பெற்று  கழகத்தை வழிநடத்தி வரும் நம் அனைவரின்  போற்றுதலுக்குரியவரும், தொண்டர்களின் உள்ளங்களில் எல்லாம் ஆட்சி செய்து வரும் எழுச்சி நாயகரும்,  மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்களும்,  பாராட்டுக்களும்…

தீர்மானம் – 2 :

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளையும் தன் உயிர்மூச்சாக முன்னிறுத்தி தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற மாபெரும் இயக்கம் மதுரையில் நடத்திய கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வரலாற்று வெற்றி பெற்றதற்கு நன்றியும்,  பாராட்டும்…

தீர்மானம் – 3:

வட கிழக்கு பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல்,  மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள  முன்பே திட்டமிடாமலும், காலத்தே மீட்பு பணிகளை மேற்கொள்ளாமல் மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியதோடு புயலின் தாக்கத்தால் பெய்த பெரும் மழையின்  பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படும் மக்களுக்கு அவர்களின் எதிர்பார்த்த நிவாரண உதவிகளை வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.  பொருளாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிடவும் வலியுறுத்தல்..

தீர்மானம்  – 4 :

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நாட்டு மக்களுக்கு தெரிந்து கொள்ளும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும்.  வேண்டுமென்றே திட்டமிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பேச்சை ஒளிபரப்பு செய்யாமல்,  இருட்டடிப்பு செய்வதற்கு கடும் கண்டனம்.  எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை சம்பந்தமாக சட்டமன்ற மரபுகளை இதுவரை கடைபிடிக்காத பேரவை தலைவருக்கு கடும் கண்டனம்.

தீர்மானம் – 5 :

மீனவர்கள் நலன் காக்க திமுகவால் தாரைவாக்கப்பட்ட கச்சத்தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள விடியா  திமுக அரசுக்கு வலியுறுத்தல் மற்றும் இலங்கை கடற்கொள்ளையர்களால் வாழ்வாதாரம் இழந்த மீனவ மக்களை வஞ்சிக்கும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்.

தீர்மானம் – 6 :

மாநில உரிமைகள் பறிபோனதற்கு திமுகவே முழு முதல் காரணமாக இருந்துவிட்டு,  தற்போது மக்களின் கவனத்தை திசைதிருப்பும் பொய்யான 520 வாக்குறுதிகளை அளித்து,  அவற்றை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றவும் பல்வேறு நாடக அரங்கேற்றங்களை நிகழ்த்தும் விடியா தி மு க அரசுக்கு கடும் கண்டனம்.

தீர்மானம் – 7 :

சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கும்,  திமுகவின் மக்கள் விரோத  போக்கிற்கும்  கடும் கண்டனம்.

தீர்மானம் – 8 :

ஊழலில் திளைத்து  நிற்கும் திமுக கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என்பதே திராவிட மாடல் ஊழல் ஆட்சியின் தாரக மந்திரம். ஊழல் ஆட்சி நடத்தும் பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம்.

தீர்மானம் – 9 :

சிறுபான்மையின மக்கள் ஆன இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களுடைய நலனை பாதுகாக்கவும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும் விடியோ திமுக அரசுக்கு வலியுறுத்தல்.

தீர்மானம் – 10 :

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13.12.2023 ஆம் தேதி பாதுகாப்பு குறைபாட்டால் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது, ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

தீர்மானம் – 11 :

ஈழத் தமிழர்கள் நலன் காக்க ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டிய மத்திய அரசை வலியுறுத்தல்

தீர்மானம் – 12 :

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் கடுமையாக பெய்து,  நெற் பயிர்கள் மற்றும் வேளாண் பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கி பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில்,  உரிய நிவாரணம் வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

தீர்மானம் – 13 :

நெசவாளர்களின் வாழ்க்கை நலிவடையக் காரணமாக இருந்து நெசவுத்தொழிலை விடுவித்து மாற்று தொழிலை தேடும் நிலையை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் நெசவுத் தொழிலையும், நெசவுத் தொழிலாளர் நலனையும் பாதுகாக்க தவறிய விடியா திமுக அரசுக்கு கண்டனம்.

தீர்மானம் – 14:

சமூக நீதியை வாய்கிழிய பேசும் திமுக பட்டியலின மக்களினுடைய நலனில் அக்கறை கொள்ளாமல்,  அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளை பறித்தும்,  அனுபவிக்க முடியாமல் தடுத்தும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளை தட்டிப் பறிக்கும் வகையில் செயல்படும் விடியா திமுக அரசின் பட்டியலின மக்கள் விரோத போக்குக்கு  கண்டனம்

தீர்மானம் – 15:

தமிழக உயர்கல்வியின் தரம் குறையும் வகையில் கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அவசரக் கதியில் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த துடிக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

தீர்மானம் – 16:

தாய் மொழியாம் தமிழ் உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் 8ஆவது  அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மாநில மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் அலுவலக மொழிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தல். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை கொண்டுவர வலியுறுத்தல்.

தீர்மானம் – 17:

சமூக நீதியை குழி தோண்டி புதைத்து,  சமூக நீதிக்கு எதிரான திமுகவின் மக்கள் விரோத போக்கிற்கு கடும் கண்டனம்.

தீர்மானம் – 18:

தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நதிநீர் பிரச்சினையில் திமுகவின் சந்தர்ப்பவாதம் மற்றும் துரோகத்திற்கு கடும் கண்டனம்.

தீர்மானம் – 19 (1):

நீட் எனும்  நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்துதான் என்று விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு ஸ்டாலினும்,  திமுகவை சேர்ந்தவர்களும் மக்களை ஏமாற்றி வாக்குறுதி அளித்தனர். சொன்னதைச் செய்வோம் என்று கூறி மக்களை ஏமாற்றிய விடியா அரசின் முதலமைச்சர் திரு.ஸ்டாலினுக்கு கண்டனம்.

தீர்மானம் – 19 (2):

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தவறியும்,  பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க தவறியும்,  வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நோய் தொற்று அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ உதவிகளை செய்ய தவறியும்,  முடங்கி போயிருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கும் கண்டனம்.

தீர்மானம் – 20:

மக்கள் நலன் கருதி புரட்சித்தலைவி அம்மா அரசு கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது. சொத்து வரி, வீட்டு வரி மின்கட்டணத்திலிருந்து ஆவின் பால் விலை வரை உயர்த்தி, மக்களை வஞ்சித்து வரும் சர்வாதிகார திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

தீர்மானம் – 21:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் புதிய அணை கட்டப் போவதாக நெருக்கடி கொடுக்கும் திமுகவின் கூட்டணி கட்சி ஆட்சியில் இருக்கும் கேரளா அரசின் செயலை கண்டிக்காமல்,  அதை தடுக்க சட்டப் போராட்டம் நடத்தாமல் மெத்தன போக்கில் இருந்து வரும் மக்கள் விரோத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

தீர்மானம் – 22:

ஜனநாயகத்தில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் பெற்றிடும் வகையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தகுதியுடைய அனைவரும் வாக்களிக்க ஏதுவாக குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் அமைத்திட இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தல்.

தீர்மானம் – 23:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும்,  புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடிடும் வகையிலும் கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் களப்பணியாச்சிட சூளுரை.

ADMK பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானத்தில் திமுக அரசை கண்டித்த அதிமுக பாஜகவை வலியுறுத்தி உள்ளதை DMKவினர் கண்டித்துள்ளனர். பாஜக மீது அதிமுக கரிசனம் காட்டுவதாகவும், பாஜகவை கண்டிக்க அதிமுகவுக்கு  துணிச்சல் இல்லை என்று பொதுக்குழுவை விமர்சித்து வருகின்றனர்.