
விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பேட்டையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவி மொத்தமாக எரியத் தொடங்கியது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 20 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இருப்பினும் குடியிருப்புக்குள் எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.